உலக புகைப்பட தினம்- மொபைல் கேமராவில் பூச்சிகளை மிக அருகில் படம்பிடித்து வியப்பில் ஆழ்த்திய புகைப்பட கலைஞர்.

insects

புகைப்படக் கலைஞர்களின் ஆர்வம் 

184வது உலக புகைப்பட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தபடும், ஆன்லைனிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் அனைத்து புகைப்பட கலைஞர்களும் இன்றைய நாளை முன்னிட்டு வித்தியாசமாக ஏதாவது செய்து காண்பிக்க ஆர்வம் காட்டுவர். அதன்படி கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்ற புகைப்படக் கலைஞர்(விளம்பர புகைப்பட கலைஞர்) இத்தினத்தையொட்டி மொபைலில் உள்ள கேமராவை கொண்டு  புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என எண்ணி மேக்ரோ லென்ஸை(External lens) பயன்படுத்தி பூச்சிகளை மிக அருகில் புகைப்படம் எடுத்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

வியப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்

மேக்ரோ லென்ஸை கொண்டு எறும்பு,  வண்டின் முகம், இளஞ்சிவப்பு நிற தட்டான் பூச்சி, பட்டாம்பூச்சி, உள்ளிட்டவற்றை மிக அருகில் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இவர் எடுத்த புகைப்படங்களில் அனைத்து பூச்சிகளின் முகத்தில் உள்ள கண், வாய்பகுதி, கொடுக்கு உள்ளிட்டவை அருமையாக பதிந்து காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

வார்த்தை வேண்டாம் புகைப்படம் போதும்

ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும் எனவும், மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு எனவும் கூறும் இவர், ஒரு புகைப்பட கலைஞர் நல்ல புகைப்படத்திற்காக நாட்கணக்கில் கூட காத்திருக்கின்றனர் எனவும் புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், கூறுகிறார்.

முன்மாதிரியாக பாலுமகேந்திரா

திரைப்படத்துறையில் சிறந்து விளங்கிய பாலுமகேந்திராவை  குருவாக ஏற்றுக்கொண்டு புகைப்பட துறையில் சாதிக்க வேண்டும் என எண்ணி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்னதாகவே சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊசி முனை நீரில் தேசிய கொடியின் பிம்பம், கண்ணால் பார்க்கும் போது கருவலையத்திற்குள் பதியும் பிம்பங்கள், போன்றவற்றையும் மொபைலில் மேக்ரோ லென்ஸை பயன்படுத்தி எடுத்து அசத்தியதும், இவரது பல்வேறு புகைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.