இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் தொடங்கியுள்ளது.

BSE

இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் சரிவுடன் தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 383.19 புள்ளிகள் சரிந்து 60,527.09 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 110.7 புள்ளிகள் சரிந்து 18,011.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. 

தொடர் சரிவில் பங்குச் சந்தை

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

நிறுவனங்களின் லாபமும் நஷ்டமும்

டாடா ஸ்டீல், சன் பார்மா, ஓஎன்ஜிசி, சிப்ளா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. டாடா மோட்டார்ஸ், பிசிஎல், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி, கிராசிம், அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்யுஎல், ஹின்டல்கோ, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசிகி, கோடக் மகேந்திரா, அப்போலோ மருத்துவமனை, கோல் இந்தியா, ஐடிசி, பிரிட்டானியா, அதாணி போர்ட்ஸ், ஏசியன் பையின்ட்ஸ், எம்எம், டெட்டன் கம்பெணி, இன்போசிஸ், லார்சன், எச்சிஎல் டெக், டிசிஎஸ், நெஸ்டீலே, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, விப்ரோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

ரூபாய் மதிப்பு உயர்வு

இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 3 காசுகள் உயர்ந்து 82.77 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.