சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்ட தமிழரான தர்மன் சண்முகரத்னத்திற்கு பலரும் வாழ்த்து

singapore president tharman

இந்திய வம்சாவளியான தமிழர்

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 70.4 % வாக்குகளைப்பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தர்மன் சண்முகரத்னத்துக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் வாழ்த்து

இந்நிலையில் சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆர்வமாக உள்ளேன். என கூறியுள்ளார். 

முதலமைச்சர் வாழ்த்து

அதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிங்கப்பூர் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு வாழ்த்துகள். உங்களுடைய தமிழ் பாரம்பரியமும், ஈர்க்கக்கூடிய தகுதிகளும் எங்களை பெருமையடைய செய்திருக்கிறது. உங்களது வெற்றி சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. உங்களது ஆட்சிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

அதேபோல், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.