அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி பங்கேற்கிறது 

india t 20 team

டி20 தொடர்

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த நிலையில், அடுத்ததாக அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா

முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர் .

அதிர்ச்சி கொடுக்குமா அயர்லாந்து..?

இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பால்பிரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் களம் இறங்க இருக்கிறது. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.