'காதலில் விழுங்கள்'.. காதலிக்க விடுமுறை அளித்த கல்லூரி.!

website post (94)

காதலில் விழுங்கள்

சீனாவில் உள்ள ஒன்பது கல்லூரிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து "காதலில் விழுங்கள்" என்று சுற்றறிக்கை மூலம் கூறி இருக்கிறது. விடுமுறையின் போது, பயண அனுபவங்களை குறிப்புகளாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கல்லூரிக்கு திரும்பி வரும் போது சமர்பிக்கவும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கூறி இருக்கிறது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 9 தொழிற்கல்வி கல்லூரிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வசந்த காலத்தை வெளியே சென்று கொண்டாட வசதியாக தங்களது மாணவர்களுக்கு விடுமுறை அளித்திருக்கிறது. ஃபேன் மீ (Fan Mei) கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விடுமுறையில் செல்லலாம் என அந்த குழுமம் மார்ச் 23-ம் தேதியன்று அறிவித்தது.

சீனாவில் ஏப்ரல் 5-ம் தேதி கிங்மிங் திருவிழாவாக அறியப்படுகிறது. அதையொட்டி, சீனாவில் இந்நாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 'கல்லறை சுத்தம் செய்யும் தினம்' என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் முன்னோர்களின் கல்லறைக்குச் சென்று அவற்றை சுத்தம் செய்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.

கல்லூரியை விட்டு வெளியே செல்லுங்கள்

இதையொட்டியே இந்த கல்லூரிகள் விடுமுறையை நீட்டித்து வசந்த கால விடுமுறை என்று அறிவித்து இருக்கிறது. "மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலிக்கவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வசந்த கால விடுமுறையை வழங்குகிறது," என்று மியான்யாங் ஏவியேஷன் தொழிற்கல்வி கல்லூரியின் துணை முதல்வர் லியாங் குவோஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"கல்லூரியை விட்டு வெளியே செல்லுங்கள், இயற்கையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வசந்த காலத்தின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துங்கள்," என மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஃபேன் மீ குழுமத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள் அனைத்தும் விமானிகள், விமானப் பணிப்பெண்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கான பயிற்சியை வழங்குகின்றன. 

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள்தொகை குறைந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு, கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க சிச்சுவான் எடுத்துள்ள முயற்சி என்றும், பிறப்பு மற்றும் திருமண விகிதங்களை அதிகரிக்க இதுபோன்ற நடவடிக்கை அவ்வப்போது செய்யப்படுகின்றன என்றும் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.