காதல் விவகாரம்: கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு இரட்டை ஆயுள்

Tiruppur case

காதல் விவகாத்தில் திருப்பூரில் அரசு பெண் வக்கீல் மற்றும் அவரது மகளை  அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசு பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் நிஷா (21). இவர் சேலம் அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி ஜமீலா பானு திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தன்னுடைய வக்கீல் அலுவலகத்தில் இருந்தார். அவருடன் மகள் நிஷாவும் அங்கு இருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென ஜமீலா பானுவின் அலுவலகத்திற்குள் புகுந்தார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜமீலா பானு, நிஷா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது தொடர்பாக அக்கம்பத்தினர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த ஜமீலா பானு, அவருடைய மகள் நிஷா ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காதல் விவகாரம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சேலத்தில் நிஷா படிக்கும் அரசு சட்டக் கல்லூரியில் ஏற்கனவே படித்த திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த ரகுமான் கான் (25)  என்பவர் நிஷாவுக்கு காதல் தொல்லை கொடுத்து இடையூறு செய்து வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து சேலம் கொண்டாலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ரகுமான் கான் மீது நிஷா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்தனர். இந்த கொலை முயற்சி நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு ரகுமான்கான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆத்திரத்தில் இருந்த ரகுமான்கான்  திருப்பூர் அலுவலகத்தில் இருந்த நிஷா மற்றும் அவருடைய தாய் ஜமீலா பானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, கேரளாவில் பதுங்கி இருந்த அப்துல் ரகுமானை  கைது செய்து அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இரட்டை ஆயுள்

இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று (12-04-2023) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் ஜமீலா பானு மற்றும் அவரது மகளை அறிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததற்காக ரகுமான்கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.