3000 கனஅடி திறந்துவிட வேண்டும்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.!

WhatsApp Image 2023-10-13 at 5

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பல நாட்களாக அரசும், விவசாயிகளும் போராடி வருகின்றனர். அதேபோல், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என தொடர்ந்து கர்நாடகா அரசு கூறி வந்தது. இதற்கு மத்தியில், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம், கடையடைப்பு போராட்டம், அரசின் சட்டப்போராட்டம் என தொடர்ந்து கர்நாடகா அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காவிரி ஒழுங்காற்று கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், வரும் 16-ம் தேதி காலை 8 மணி முதல் 31-ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகத்தை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையில், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதற்கு மத்தியில் காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று அக்-13 நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு 16 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.    

இந்தநிலையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 16-ம் தேதி முதல் அக்-31-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை ஏற்று கவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.