அமேசான் அகாடமியை தொடர்ந்து உணவு விநியோக சேவைகளை இந்தியாவில் நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பொருளாதார சூழ்நிலையை சீர்செய்யும் வகையில், மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், அமேசான் நிறுவனம், உயர்கல்வி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ‘அமேசான் அகாடமி’ யை மூட முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் தனது உணவு டெலிவரி சேவையை நிறுத்த அமேசான் முடிவு செய்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 29 முதல் இந்தியாவில் உணவு விநியோக சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, அமேசான் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது உணவக ஒப்பந்தாரர்களிடம், மே 2020-இல் தொடங்கிய உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.