வடமாநிலத்தவருக்கு எதிராக வதந்தி பரப்பிய நபர் சிறையிலடைப்பு..!

Tiruppur rumour

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பீகாரைச் சேர்ந்த உபேந்திர ஷானி என்பவரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான சமூக விரோதிகள் சிலர் வதந்தி பரப்பி வந்தனர். அதில் Headlines Bihar என்ற முகநூல் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாகவும், பீஹார் மாநிலத்தவரை தமிழர்கள் அடித்து துன்புறுத்துவதாகவும், பீஹார் மாநிலத்தவர்கள் திருப்பூர் இரயில் நிலையத்திற்கு செல்லவிடாமல் தடுக்கப்படுவதாகவும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருபிரிவினரிடையே பிரிவினையை தூண்ட முயற்சித்தும், இந்திய ஒருமைபாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 5 வழக்கு பதிவு செய்யப்பட்டன.  

திருப்பூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சித்ராதேவி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த 10ம் தேதி பாட்னா சென்று, அங்கு பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் Headlines Bihar, என்ற சமூக ஊடக அலுவலகம் சென்று இப்பதிவு குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரப்பிய நபர் உபேந்திரா ஷானி (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவரது மொபைல் எண்ணைக்கொண்டு அந்த நபர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து மொபைல் சிக்னல் காட்டிய பீகார் ரத்வாரா ரஞ்சீத் கூல் தங்க சேமிப்பகம் பகுதிக்குச் சென்ற போலீசார், அங்கு மறைந்திருந்த உபேந்திர ஷானியை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பீகாரில் இருந்து உபேந்திர ஷானியை திருப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்  அடைத்தனர்.