Tamil News
Tamil News
Sunday, 19 Nov 2023 11:30 am
Tamil News

Tamil News

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அண்மைக்காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால், கட்சி செயல்பாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அவ்வப்போது, அவருடைய பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்து விருந்தளிப்பார். அண்மையில், விஜயகாந்த் தீபாவளி கொண்டாடிய போட்டோவை இணையத்தில் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. 

இந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களாக நடிகர் விஜயகாந்த் சளி,இருமல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. நடிகர் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், தலைவர் விஜயகாந்திற்கு 
செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என தேமுதிக விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில்;"தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.